வார்த்தை விளையாட்டு.

"சொல்  பின்வருநிலையணி"  ---  எனக்குப் பிடித்த நூல், திருக்குறளில்  ஒரே சொல் தொடர்ந்து வெவ்வேறு (பே.சோ.வி. உங்கள் திருத்தத்திற்கு நன்றி)  பொருளுடன் வருவது இவ்வாறு அழைக்கப்படும். ஒரே சொல், ஒரே (பே.சோ.வி. உங்கள் திருத்தத்திற்கு நன்றி) பொருளுடன் வந்தால், அது சொற்பொருள் பின்வரு நிலையணி என்பர். அந்த ஞாபகத்தில்  ஏதோ என்னால் முடிந்தது....
  1. 'Because' தொடர்ந்து மூன்று முறை வருமாறு, அர்த்தமுள்ள  ஒரு வாக்கியம் எழுத முடியுமா ?
  2. 'And ' தொடர்ந்து 13 (பதிமூன்று) முறை வருமாறு, அர்த்தமுள்ள ஒரு வாக்கியம் எழுத முடியுமா?
  3. தமிழ் எழுத்து 'கு' முதலில் வருமாறு அமைந்த சொற்களை (words) மட்டுமே வைத்து, அர்த்தமுள்ள வாக்கியம் எழுத முடியுமா ?
விடைகள்  :
It is rare to have a sentence ending with the word 'Because', because, 'Because' is a conjunction.

While writing the name board titled "Anand And Anderson Company", a painter left more gap between 'An' and 'and' and 'and' and 'And' and 'And' and 'And' and 'And' and 'erson'.




குறுங்கதை :
கும்பகோணத்து கும்பமேளா  குளத்தருகில், குடிசையில் குடியிருக்கும் குப்புசாமி, குருவம்மாள் குடும்பத்தின் குமரன், குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை, குசும்புடன், குச்சியால் குத்த, குரங்கு குபீரென குளத்தில் குதித்து, கும்பியை குழப்பியது.
-------------------------
பின்  குறிப்பு :
'கும்பமேளா' -- மஹாமஹம் அல்லது மாமாங்கம்
அட.. டைட்டில் கூட 'கு'லயா.

சில செய்திகள் -- எனது முயற்சி..

  1. போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு
    • அவசர  முடிவு எடுக்கலேன்னா, மத்தவங்க "ஆயுளுக்கே" தண்டனை தான்.
  2. ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:  
    • ('ஆச்சி') மசாலா விக்குறவங்க என்ன தப்பு பண்ணாங்க, பிடிக்குறதுக்கு..?   
  3. மலட்டுத்தன்மை உள்ளபெண்ணுக்கு 'குவா குவா'
    •  மலட்டுத்தன்மை ஒரு பரம்பரை வியாதியா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு சான்ஸ்.
  4. பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 
    • சோதனையான' காலம் வந்தா (அபார) வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  5. 105 துப்பாக்கிகளால் மரியாதை 
    • ஒரு துப்பாக்கின்னாலே நாங்க ரொம்ப மரியாதை  தந்துருவோம்ல.. என்னாத்துக்கு அம்புட்டு..
  6. கலவர வழக்கு விசாரணை ஆஜராகவில்லை மோடி 
    • 'மோதி' பாக்காலான்னு நெனைச்சாங்க சிலபேரு.... பப்பு வேகல.. 
    • ('Modi' என்பதற்கு சரியான உச்சரிப்பு 'மோதி' தான் 'மோடி'  அல்ல) 
  7. ஒகேனக்கல் பிரச்னைக்கு 4 நாட்களில் பேச்சு
    • பேச்சு.. பேச்சாத்தான் இருக்கணு....  செயல்லலாம்  எறங்கப்டாது  ஆமாம்.
  8. ராமநாதபுரத்தில் நிறுத்த வசதியில்லாமல் ராமேஸ்வரம் சென்ற விழிப்புணர்வு ரயில் 
    • அவங்க வந்ததே விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான்.. (ரயில் நிறுத்த வசதி இல்லைங்கறது உள்பட)
  9. அரசு மருத்துவமனையில் மாலை நேர சிகிச்சை இல்லை 
    • டாக்டருக்கெல்லாம் 'மாலைக் கண்' இருக்குதோ ?
  10. சுகாதார நிலையங்களில் 'எக்ஸ்ரே பிலிம்' இல்லை  
    • நாங்கல்லாம் எதிர்பாக்குற 'பிலிமே' வேற..

I P L - சில சிந்தனைகள்


ஐ.பி.எல் பற்றி இரண்டு கேள்விகள் எனக்கு ரொம்ப ஞாயமா பட்டுது.

1) பள்ளி இறுதித் தேர்வு நேரத்துல கிரிக்கெட் மேட்ச் தேவையா ?
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் இது கண்டிப்பா பாதிப்பை ஏற்படுத்தும்னு நா நெனைக்கிறேன். காசத்தவிர வேற குறிக்கோளே இல்லாத இந்தமாதிரி விளையாட்டு தொடர் போட்டி தேவையில்லைன்னு எனக்குத் தோணுது. என்னோட பேச்சை யாரு கேக்கப்போறாங்க ? கிரிக்கெட்  பிடிக்காதுன்னு சொல்லுற ஆளு நா இல்லை. ஒரு காலத்துல ராத்திரி 2:30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நியுஜிலாந்துல நடந்த மேட்ச பாத்துருக்கேன். இப்பலாம் கிரிக்கெட்டுக்காக நா இல்லை, எனக்கு வேணும்னா மட்டுந்தான். அதுகூட எனக்கு வேற முக்கியமான வேலை இல்லாம நா சும்மா ஒக்காந்திருந்தாதான்.. 

2) மின்சாரம்  விரையமாகிறது -- ஃப்ளட்லைட்  போட்டிகள் தேவையா ?
கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கறவங்க வசதிக்காக (வெயில், வேர்வை போன்றவை) ஆட்ட நேரத்தை "ஃப்ளட்லைட்" வைத்து விளையாடுறாங்க. எங்க ஊர்ல, கடந்த இரு வாரங்களா, 'ஆட்டோ நகர்' எனும்,  தொழிற்சாலைகள் (industrial area) உள்ள எரியால வாரம் 24 மணி நேர 'பவர் கட்' நடைமுறைல உள்ளது. இந்த வாரம் முதல் வாரம் மூணு நாளா 'பவர் கட்' பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. காரணம், மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு. இந்த மாதிரி பொருளாதார முன்னேற்றத்துல பெரும் பங்கு வகிக்கும் தொழில்துறைல மின்சாரத் தட்டுப்பாடு ஆரம்பிச்சா, எப்படீங்க முன்னேற முடியும் ? தொழில் துறையில் பாதிப்புன்னா அது நேரடியா நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்காதா ? இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீணாப் போவுதே தவிர, எனக்கு உருப்படியாத் தெரியல. எந்தளவுக்கு இதுல காசு பண்ணுறாங்கனு சொல்லுறதுக்கு, போன வருஷமே (2009) உதாரணம். பொதுத் தேர்தல் காரணமா பாதுகாப்பு குறைபாடு இருக்கலாம்னு, மத்திய அரசு போட்டிகளை ஒத்திப்போடுமாறு சொல்லியும் அதை கேக்காமல்,  அதே ஷேடுளில் போட்டிகள வேற நாட்டுல நடத்தி அவங்க வருமானத்துக்கு ஒரு குறையுமில்லாமல் பாத்துக்கிடாங்க..

ரெண்டு  ப்ராப்ளேத்துக்கும் ஈசியா எனக்கு ஒரு ஐடியா தோணுது. டிசம்பர், ஜனவரி மாசத்துல பகல்ல மேட்சுகளை வைச்சுகிட்டா..... மாணவர்களும் தப்பிச்சுப்பாங்க, கரண்டும் விரையமாகாது.

நா சொன்னது தப்பா ?

எனக்குப் பிடித்த 12 பெண்கள் -- தொடர் பதிவு.

'எங்கள் ப்ளாக்'ன் திறந்த அழைப்பிற்கு (open invitation) நன்றிகள். எனது கணக்கில் பன்னிருவர் வருகிறார்கள். 'டஜன்' கூட ஒரு செட் தானே ?

  1. பரமபத நாதன், பரந்தாமனின் துணையான 'ஸ்ரீ, மஹாலக்ஷ்மி'(திருமகள், அலைமகள்)
  2. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியான 'ஆண்டாள்'
  3. சிவனின் ஒரு பாதியான 'உமையவள்' (மலைமகள்)'
  4. சிவனைத் துதிபாடிய 63 நாயன்மார்களில் ஒருவரான 'காரைக்கால் அம்மையார்'
  5. கல்விக் கடவுளான 'ஸரஸ்வதி (கலைமகள்)'
  6. 'சீதை'  (இராமாயண நாயகி)
  7. 'தாரை' (இராமாயண வாலியின் துணைவி)
  8. 'தமயந்தி' (நள தமயந்தி)
  9. 'மண்டோதரி' (இராமாயண ராவணின் துணைவி)
  10. 'நளாயினி' (கணவனை கூடையில் வைத்து தலையில் சுமந்தவள்)
  11. உலகத்தினுள்ள அனைத்தையும் தாங்கும் 'பூமாதேவி'
  12. நான் பெருமையோடு விரும்பும் எனது தாய்நாட்டு அன்னை 'பாரத மாதா'
பின் குறிப்பு : 6 முதல் 10 வரை இடம் பெற்றவர்கள் 'பதிவ்ருதை - கற்புக்கரசி' ஆவார்கள். இன்றும் எங்கள் வீட்டில் உள்ள பெண்டிர் அவர்களின் பெயரைச் சொல்லி எண்ணையால் தரையில் பொட்டு வைத்து, அனைத்தையும் கோடு போட்டு சேர்த்த பின்னரே, தங்கள் தலையில் எண்ணையை தேய்த்துக் கொள்வார்கள். (before taking oilbath )

உபரிக் குறிப்பு : ஆண்கள் எண்ணை தேய்க்கும் முன் பின்வரும்  சிரஞ்சீவிக்களை (எப்போதும் இருப்பவர்கள் - eternal) நினைத்து மேற்சொன்னவாறு செய்வார்கள்.
  1. அஸ்வத்தாமா ( மகாபாரதத்தில் வருபவர் )
  2. பலி (பலி சக்கரவர்த்தி)
  3. வியாசர் (மஹாபாரதம் எழுதியவர்)
  4. அனுமான் (ஆஞ்சநேயர்)
  5. விபீஷணன் (ராவணனின் தம்பி)
  6. கிருபர் (கிருபாச்சாரியார், மஹாபாரதம்)
  7. பரசுராமர் (10 அவதாரங்களில் ஒருவர்)
'எங்கள் ப்ளாக்' திறந்த அழைப்பினை விடுத்ததால், நான் யாரையும் தொடர அழைக்கவில்லை. ஏனென்றால், பெரும்பாலும், எனது பதிவினை (வலைப்பூ) படிப்பவர்கள் யாவரும் 'எங்கள் ப்ளோக்கின்' விசிறியாக இருப்பதாகத் தெரிகிறது.

நன்றி.

பதின்ம வயது -- தொடர் பதிவு.

முதலில், இத்தொடர் பதிவிற்கு அழைத்த 'எங்கள்-ப்ளாக்' நண்பர்களுக்கு நன்றி. அதே சமத்தில் தாமதமாக இப்பதிவினை எழுதியமைக்கு 'எங்கள்-ப்ளாக்', என்னை மன்னிப்பார்களாக.

'பதின்ம வயது' -- 11 முதல் 19 வயது வரை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் 'டீன் ஏஜ்' என சொல்லுவது 13-19 வயது வரை குறிப்பிடப்படும்.

இவற்றில் எதனை நீங்கள் நினைத்தீர்கள் என சரியாகத் தெரியாதலால், நான் இரண்டிற்கும் பொதுவான வயது நிகழ்வுகளை சொல்லுகிறேன். லிஸ்ட் பெரியதாக இருக்குமாதலால் அவற்றுள் முக்கிய நிகழ்வுகளான விளையாட்டுக்களை பற்றி இங்கு சொல்ல விழைகிறேன். நா ரொம்ப விளையாட்டு பிள்ளை. (மற்றவைகளை தனித்தனி பதிவாகப் போடலாமல்லவா ?)



குறுப்பிடும் படி விளையாடிய விளையாட்டுகள்.
உள்-அரங்கு விளையாட்டுகள் : 

'பகடலி' (Pagadali - இது பளிங்கு (கோலிக்குண்டு) விளையாட்டு ஒரு போர்டில் ஆணிகள் 'V, W, U' சிறிய, பெரிய வடிவங்களில் அடிக்கப்பட்டு எண்கள் எழுதப்பட்டிருக்கும்.. ஒரு ஓரத்திலிருந்து பளிங்கினை ஜென்டிலாக தட்ட வேண்டும். அது எந்த எண்களின் ஆணிகளில் மாட்டிக் கொள்கிறதோ, அத்தனை பாயிண்டுகள். --  விண்டோஸ் XPல் 'pinball' எனப் பெயர்)

'தாய கட்டம் (கட்டை)' -- மகாபாரதத்தின் முக்கிய பாத்திரம் இது. எனக்கு, முக்கியமாக சம்மர் லீவில் மிகவும் பிடித்த விளையாட்டு.

'பரம பதம்' -- 'வைகுண்ட ஏகாதசி'யில் விளையாடினால் நல்ல பலன் கிடைக்குமென நம்பிக்கை. 

'சொட்டாங்கல்' - பாட்டுப் பாடிய படியே கற்களை மேலே போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு.  சாம்பிள் :  "மூணு - முக்கிடு சிக்குடு பாவக்காய், முள் இல்லாத ஏலக்காய்."

'சில்லுக்கோடு'  --  மூன்று விதமான வகைகை உண்டு. இது உள் மற்றும் வெளி அரங்கு விளையாட்டு.

'செஸ்' -- எனது சகோதரர்கள் அனைவரும் என்னை விட நன்றாக விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார். ஒருமுறை 'ஊட்டி'  டோர்னமெண்டில் 'செஸ்' ஆனந்தின் ரூம் மேட்டாக இருந்திருக்கிறார்.

'ராஜா - ராணி - திருடன் - போலிஸ்' -- நான்கு பேர் விளையாடும் விளையாட்டு. நான்கு சீட்டுக்கள் எழுதப்பட்டு ஒவ்வொரு ரவுண்டிலும் குலுக்கிப் போட்டு எடுத்து போலிசு திருடனை அடையாளம் காண வேண்டும்.

"ரம்மி, ஆஸ், திருடன், 420 ", வித விதமான சீட்டுக் கட்டு விளையாட்டுகள் விடுமுறை நாட்களில் இரவு முழுவதும் வெட்ட வெளியில் (வாசற்புறத்தில்) விளையாடிய அனுபவமுண்டு.


வெளி-அரங்கு விளையாட்டுக்கள் : 
'கிட்டிப்புள்'  -- இரு குழுக்களாக விளையாடுவது மரபு. இருப்பினும் எனக்கு, ஒண்டிக்கு-ஒண்டி மிகவும் பிடித்த விஷயம்.
 

'பேந்தா'  கோடு / கட்டம்  போட்டு மூன்று பளிங்குகளை உள்ளே வைத்து மற்ற பளிங்கியால் அடித்து வெளிய எடுக்க வேண்டும். ஒரு வகை பளிங்கு விளையாட்டு.


'கவை குச்சி'  -- மெல்லிய மூங்கில் குச்சி '7' போன்ற வடிவம் ஒருவன் Catcher .. அவனுடைய குச்சி  கீழே கிடக்கும், மற்றவர்கள் அதனை இழுத்துச் செல்வர். கேச்சரிடம் பிடிபடாமல் இருக்க, அவன் தன்னை நெருங்கி வரும் சமயம், தன்னுடைய கவை-குச்சியை 'சாணம், பாராங்கல், இலை, போன்ற' குறிப்பிட்ட வஸ்துக்களின் மீது வைத்திருக்க வேண்டும்.

'Seven Beaten' --  தட்டையான 7 சில்லுகள் (கற்கள்) ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து இரு   குழுவாக விளையாடும் விளையாட்டு. ஒரு குழுவில் ஒவ்வொருவராக, சற்று தூரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் 7 சில்லுகள் (கற்கள்), பந்தினால் அடித்து கீழே தள்ள வேண்டும். அப்படி செய்தால், உடனே எதிரணியினரால் பந்தடி வாங்காமல், மீண்டும் எல்லா கற்களையும் மீண்டும் அடுக்கி (கீழே விழாமல்), 'Seven Beaten ' எனச் சொல்லி, அதனை சுற்றி ஒரு வட்டமிட்டால் ஒரு 'பாயிண்டு'. அப்படி செய்யும் முன்னரே, அவர்கள் அணியில் யாராவது பந்தடி வாங்கினால், எதிரணியினருக்கு கற்களை அடித்து மீண்டும் வைக்க வாய்ப்பு வழங்கப்படும். இப்படி வாய்ப்பு மாறி மாறி வரும். அதிக பாயிண்டுகள் எடுத்தவர்கள் 'winner' ஆவார்கள்.

'இரட்டை கோடு, சீறு-கோடு, அமுக்கு டப்பான்' -- வகை-வகையான பம்பர விளையாட்டுக்கள்.
பம்பரத்தினை லாகவமாக கையில் ஏந்தி மற்ற பம்பரத்தினை தட்டி ஓட வைப்பது ஒரு கலையாகும். பம்பரம் கையில் சுற்றும்போது, அதன் வெயிட் தெரியாமல் பம்பரத்தின் ஆணி, பூண் ( மிதிவண்டியில் காற்று வெளியே வராமல் தடுக்கும் 'Valve' மீது உள்ள திருகு ) போன்றவை சரியான முறையில் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். ஒரு முறை, சாட்டையினால் ஓங்கி வீசப்பட்ட பம்பரம், நண்பர் ஒருவரின் தலையில் பட்டு ரத்தம் வந்து ஆஸ்பத்திரி சென்று தையல் போட வேண்டிய கொடூரமான நிகழ்வும் நடந்தது உண்டு.

'பே-பே'  -- பாடலுடன் ஆரம்பமாகும் விளையாட்டு. ஒருவர்(1 ) கையில் பந்து இருக்கும். அவர் பாடலை (விளையாட்டினை) பாடுவார்.  பின்வருமாறு பாடல் செல்லும்..
            1   : பே - பே
    மற்றவர்கள் : என்னாப் பே ?
               : பந்து பே
               : என்னாப் பந்து ?
               : ரப்பர் பந்து
               : என்னா ரப்பர் ?
               : இந்தி(யா) ரப்பர்
               : என்னா இந்தி(யா)?
               : வட இந்தி(யா) 
               : என்ன வட (வடை) ?
               : ஆமை வட (வடை)
               : என்ன ஆமை ?
               : கொ(கு)ளத்தாமை.
               : என்ன கொ(கு)ளம் ?
               : திரி(ரு)க்  கொ(கு)ளம்.
               : என்னத்் திரி ?
               : விளக்கு திரி.
               : என்ன விளக்கு ?
               : குத்து விளக்கு.
               : என்ன குத்து ?
               : கும்மாங் குத்து..
(என்று சொல்லி, பந்தை வீசி யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், தொடர்ந்து பந்து யாருக்கு கிடைக்கிறதோ அவர் மற்றவரை அடிக்கலாம். என்ன வன்முறையான விளையாட்டு.. ஆனாலும்..... ஜாலிக்காக விளையாட, சில சமயம் சண்டையிலும் முடிவடையும். இளங்கன்று பயமரியாதல்லவா ? )

இப் பதிவினை தொடர நான் அழைப்பவர்கள் :  -- பெயர் சொல்ல விருப்பமில்லை, சாய் ராம் கோபால், சித்ரா.  நீங்கள் விளையாட்டினை (விளையாட்டாக) எழுதவேண்டும் என்பதல்ல (சீரியசாக்கூட எழுதலாம்). எனக்குப் பிடித்ததால், இங்கு விளையாட்டினை பற்றி எழுதினேன்.

மீண்டும் நன்றி  டு 'எங்கள் ப்ளாக்'

 

 

         

Exam paper