அர்த்தமுள்ள குறியீடு  (சவால் சிறுகதை-2011)  

செந்தமிழ் நாட்டின் தலைநகரின் மத்தியப் பகுதியில் இருக்கும், நூற்றாண்டு கண்ட ஆளுயர்ந்த மாளிகை பல்கலைக் கழக பேச்சரங்கம், 'எள்' போட்டா எண்ணையாயிடும்னு சொல்லுறமாதிரி அரங்கம் ஓவர் லோடாகி இருந்தது.

"காசு கொஞ்சம் கொஞ்சமாத்தான் சேக்க முடியும், சினிமா தியேட்டருல ஒவ்வொரு ஆளா சேர்றது போல, ஆனா சேந்த காச, சினிமா முடிஞ்சு கூட்டம் வேகமா கலையறதுபோல சீக்கிரம் செலவழிச்சுடலாம்", இதற்கு நேர்மாறா இருக்கும் நமது இளம் புயல் விஷ்ணு பேசற நிகழ்ச்சி இருக்கும். சும்மாவா, பத்து வயசுல பத்தாவது படிச்சவனோட அறிவும், காலேஜ் போகறப்ப பாடம் தவிர அதிவேக  சமயோசித  புத்தியும்  கொண்ட அதிசய பிறவியாச்சே !

கம்பியூட்டர் ஹார்ட்வேர் அன்ட் சாஃப்ட்வேர் ரெண்டுலயும் முனைவர் பட்டம் வாங்கி.. நாட்டோட ராணுவம் மற்றும் முக்கிய பாதுகாப்புத்  துறையில பொறுப்புள்ள பதவில இப்ப இருக்கான். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில விஷ்ணு பேச ஆரம்பிச்சான்,
"நம்ம நாட்டோட நாளைய தூண்கள் நீங்களே. உங்களுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. பொறுப்போடு உங்க கடமையை செய்ய வாழ்த்துக்கள். இன்றைய கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் கணணி, கைபேசி இப்படி எலெக்ட்ரானிக் யுகத்தில் எத்தனையோ பயன்கள். கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களும், அதன் மூலம் தொழில்நுட்பத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்பாடு பட்டு உயர்த்துபவர்கள் ஒருபுறம். அந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தி பணம் பதவி.. இன்னும் என்னென்னவோ. முக்கியமா தீவிரவாதத்த தூண்டிவிட்டு கலவரம் பண்ணி மக்களுக்கு தீமை செய்யறவங்கள நீங்க முக்கியமான எதிரியா நெனைக்கணும். நீங்க நல்லவர்களாகவும், நல்லவர்களுக்கு மட்டுமே துணைபோகவும் வேண்டும். அலுவல் பணி காரணமாக என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புதிய பட்டதாரிகள் அனைவருக்கும், மறுபடியும் வாழ்த்துக்கள்."
அவனது சிற்றுரை முடியட்டும் எனபதற்கு காத்திருந்ததுபோல அவரது கைபேசி சிணுங்கியது.. எடுத்து பேச ஆரம்பித்ததும், முகம் வேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆனாலும் அதை உடனே உணர்ந்த  விஷ்ணு, தனது முகபாவத்தை இயல்புநிலைக்கு கொண்டு வந்துகொண்டே பதில் சொன்னான்.. "ம்ம் பத்து நிமிஷத்துல அங்க வந்துடறேன்"
-----------------------------------
சொல்லியபடி பத்தே பத்து நிமிஷத்துல அவனோட அலுவலகத்தின் முதன்மை வாயினுள் தனது காரை நுழைத்தான். அந்த  கட்டிடத்தின் காம்பவுண்ட்  சுவரை சுற்றியுள்ள எல்லா பகுதியிலும் வழக்கமான  செக்யூரிட்டி இல்லாமல் முகம் தெரியாத புதிய ஆட்கள்  டியூட்டியில் இருப்பது முதலில் அவன் கண்ணில் பட்டது. போர்டிகோ சென்று காரை நிறுத்தவும், உயர் ரக துப்பாக்கி ஏந்திய தடித் தடியான மூன்று ஆட்கள் அவனை நெருங்கவும் சரியாக இருந்தது. அதில் இருவர் உடனே அவனுடைய இரு பக்கங்களிலும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்க, மற்றவன் தனது துப்பாக்கியை மடக்கி, அவனை முழுவதுமாக சோதிக்கத் துவங்கினான்.

கடுமையான சோதனைக்குப் பின், அவனிடம் ஆயுதம் எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்துமுடித்து மிதனான குரலில் அவனிடன் சொன்னான், "நீ, எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், உள்ள இருக்குற உங்க ஆளுங்க எல்லாரும், நீ உள்பட பிழைக்க முடியும். தப்பித் தவறி எதிர்ப்பு காட்டினாகூட, அப்படி எங்களுக்கு சந்தேகம் வந்தாகூட தயங்க மாட்டோம், தூக்கிடுவோம்", சொல்லிக்கிட்டே விஷ்ணுவோட கண்ணையும், முகத்தையும் உற்றுப் பார்த்து விஷ்ணுவிடம் பயம் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான்.

ஐந்து நிமிடத்தில், நால்வரும் மையக் கதவு வழியே உள்ளே செல்ல, லிஃப்ட் அருகே துப்பாக்கி ஏந்தியபடி இருந்த வேறு மூன்று ஆசாமிகளின் பார்வையை ஏந்திக் கொண்டே லிஃப்டினுள் சென்று, இரண்டாவது தளத்தில் முதல் அறையினுள் சென்றார்கள்.

அவர்கள் நோக்கம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முக்கிய இரகசியங்கள்தான் என்பதை தெள்ளத் தெளிவாக விஷ்ணுவிடம் சுருக்கமாக சொல்லப் பட்டது.  ராணுவ பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கிய அவனது அலுவலக லேப்டாப், சரியான பாஸ்வேர்டை மட்டுமே விழுங்கி உங்களுக்கு வழிவிடுவேன், இல்லையேல் முகத்தில் காரி துப்புவேன் எனச் சொன்னதால், வேறு வழியின்றி அவன் அழைக்கப் பட்டதும், விஷ்ணுவிற்கு தெரியவந்தது.

விஷ்ணுவின் கண்கள் அவர்களை ஒரு நோட்டம் விட்டன. வந்தர்களில் பாதி பேருக்கு நரைத்த முடி, மற்றவர்களுக்கு கருத்த முடியாக இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலையை மழித்து பழிவாங்கியது. தலை நரைச்ச ஆளெல்லாம், சொட்டைத் தலையைப் பார்த்து ஆறுதல் பெறுவதும், சொட்டை ஆளெல்லாம், நரைச்ச தலை ஆளை பார்த்து ஆறுதல் பெறுவதும் மனதில் தோன்றியது. மனதினுள் சிரித்தான். கண்ணுக்குக் கீழே கருப்பு முகமூடி, வந்திருந்த அனைவர் முகத்திலும்.

சக அலுவலர்கள் வாயினுள் துணி வைத்து கைகள் கட்டப்பட்டு, துப்பாக்கியை எதிர்கொண்ட வண்ணமிருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டான், விஷ்ணு. தனக்கு மட்டுமே அந்த பாஸ்வேர்ட் தெரிந்திருப்பது ஒரு விதத்தில் நல்லது என்று நினைத்தவன், அப்போது மற்றவர்களின் உயிர் அந்தரத்தில் ஊசல் ஆடுவதை நன்கு கணித்தான்.

விஷ்ணு அவர்களின் தலைமை ஆளிடம் கேட்டான். "இந்த லேப்டாப்பில் இருக்குற தகவல்தான உங்களுக்கு முக்கியம் அந்தப் பாஸ்வேர்டு தந்தா இவங்கள விட்டுடுவீங்களா?" என்றான்.

"அதெப்படி போதும். நீ பக்கத்துலேயே இருந்து எல்லா முக்கியமான ஃபைல்களையும்  காமிக்கணும். எங்க பக்கமும் எக்ஸ்பெர்ட் இருக்காங்க. அவங்க தகவல்களோட தன்மைய உறுதி செஞ்சாத்தான் உங்க எல்லாருக்கும் விடுதலை. அதுவும் நாங்க இந்த லேப்டாப்ப  எடுத்திட்டு, இதோ இங்க இருக்காரே எஸ்.பி. கோகுல்  அவரோட நாங்க எல்லாரும் எங்க இடத்துக்கு ஸேஃபா போன பின்னாடிதான்", சொன்னான் ஹெட் முகமூடி

சொந்த பந்தமில்லாத எஸ்.பி. கோகுல், அந்த அலுவகத்திற்கு அமர்த்தப்பட்ட பிரத்யேக போஸில் ஆபீசர். செக்யூரிட்டி வியூகங்கள அமைக்கிறது அவரோட தலையாய கடமை.(!) அவரை மடக்கிப் போட்டுத்தான் இந்த கும்பல் தன்னோட அதிரடி திட்டத்தை  இப்போது நடத்துவதும் சுருக்கமாக சொல்லப் பட்டது.

எஸ்.பி.கோகுல்  தொடர்ந்தார், "ஆமா, நானும் எப்ப பெரிய பணக்காரனாகி வாழ்க்கையில செட்டில் ஆகுறது. இந்த குருப்புக்கு உதவி செஞ்சு, இந்த டீல்ல லம்ப்பா ஒரு தொகைய அடிச்சிட்டு, வசதியா வேற நாட்டுல வேற பேருல வெள்ளைக்கார தோல் பொண்ணோட செட்டில் ஆயிடப் போறேன். அதுக்கு இந்த கும்பல் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிட்டாங்க. சரி, சரி வேலைய ஆரம்பிங்க". என்று தனது பங்கிற்கு வாலாட்டினார்.

வேறவழி இல்லை என்பதை உணர்ந்த விஷ்ணு, லேப்டாப்பை உயிர்பித்தான். அவன் செய்வதை கவனமாக ஒரு குள்ள முகமூடி கூர்ந்து கவனிக்கலானான்.
  • username : vishnu
  • password : *********
எஸ்.பி கோகுல், விஷ்ணு தந்த பாஸ்வேர்ட் அடங்கிய துண்டுச் சீட்டை  மேசைமீது வைத்து விட்டு, அதைப் பார்த்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை எழுதிக் கொண்டு, மற்ற  தகவல்களை தனது கையில் இருந்த குறிப்பேடில் எழுத ஆரம்பித்தார். விஷ்ணு அளித்த பாஸ்வேர்ட் மேட்ச் செய்தபின், தான் தேடிக்கொண்டிருந்த மணாளனைக் கண்ட மங்கைபோல கதவை திறந்தது லேப்டாப். லேப்டாப்பினுள் அதிகமாக பைல்கள் இருக்கவில்லை. தேவையான முக்கியமான தகவல்கள் மட்டும், சரியான முறையில் மற்றவர்களுக்கு புரியும்படி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பெடுத்துக் கொண்டிருந்த குள்ளனுக்கும் எளிதாகப் புரிந்தது. மேம்போக்காக பைல்களின் தன்மையை உறுதிபடுத்திக் கொண்டான்.

அனைத்தும் முடிந்ததும். குண்டன், லேப்டாப்பை ஷட்டவுன் செய்து மீண்டும் அதனை உயிர்பித்தான். எஸ்.பி தந்த குறிப்பேடில் இருந்தபடி யூசர் நேமும், பாஸ்வேர்டையும் டைப் செய்து, மீண்டும் எல்லா ஃபைல்களையும் மேம்போக்காக பார்வையிட்டன. பிறகு தலைமை முகமூடிக்கு பச்சைக் கொடி காட்டுவதுபோல தம்ஸ்-அப்பினான்.

அரை மணி நேரத்தில் அனைத்தையும் முடித்துக் கொண்டு அந்த முகமூடிகள், தங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டு விஷ்ணுவின் வாயிலும் துணியை வைத்து மூடி, கைகளை பின்னால் கட்டிபோட்டு, அலுவலக எல்லா அறைகளையும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு, வந்தவழி திரும்பி சென்றார்கள். இதுவரை எஸ்.பி.யாக இருந்த கோகுலும், 'பி'யை உதறிவிட்டு அவர்களுடன் 'எஸ்' ஆனார்.

பல்கலைக் கழகத்தை விட்டு விஷ்ணு வரும் வழியில் ஓரளவிற்கு ஊகித்து, தனது கைபேசி மூலம், ஒன்றரை மணி நேரம் கழித்து தன்னிடமிருந்து தகவல் வராத நிலையில் தனது அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்போடு வருமாறு இன்ஸ்பெக்டர் கண்ணபிரானிடம் தகவல் தந்திருந்தான். அதன்படி தேவையான அளவிற்கு தகுந்த ஆயுதமேந்திய   காவலர்களுடன் வந்தவர்கள் அனைத்து அலுவலர்களின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயம் பற்றி பேசலானார்கள்.

மற்றவர்கள் பட படக்க.. விஷ்ணு அமைதியாக, எந்த தப்பும்  நடக்காதமாதிரி இயல்பாக  இருந்தான். அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுக்கு ஆச்சர்யம். இந்தளவுக்கு நடந்தும் விஷ்ணுவிடம் பதட்டமோ படபடப்போ இல்லையென்று தான்.

விஷ்ணுவின் உயரதிகாரி விஷ்ணுவிடம் "விஷ்ணு, நீங்க கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்த முக்கியமான ராணுவ, பாதுகாப்பு ரகசியங்கள் எல்லாம் இருக்குற உங்க லேப்டாப்ப எடுத்துட்டுப் போயிட்டங்களே. என்னதான் உயிர்ச் சேதம் இப்ப இல்லேன்னா கூட, அந்த ரகசியம்லாம் தெரிஞ்சிட்டு நூத்துக்  கணக்கான உயிர்கள கொன்னுடுவாங்களே  உங்க முயற்சிலாம் வீணாப் போயிட்டுதே", என்று ஆதங்கப் பட்டார்.

அவரிடம் சென்று ஒரு துண்டுச் சீட்டை கையில் அழுத்தியபடி, "எனக்கு கொஞ்ச நேரம் டயம் கொடுங்க., குடும்பத்தோட ஊருக்கு போகவேண்டிய நிலை. வீட்டுல எல்லாரும் தயாரா இருக்காங்க. என்னோட நெலமைய  ஃபோன் மூலம் சொல்லிட்டு வந்துடறேன்", எனச் சொல்லியபடியே, பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினான், விஷ்ணு.

துண்டுச் சீட்டில் படித்துப் பார்த்த அவனது உயரதிகாரி மகிழ்ச்சியடைந்தாலும், மிஞ்சி நிற்கும் ஆச்சர்யத்தையே வெளிப்படுத்த முடிந்தது.
------------
சொன்னபடி மீண்டு(ம்) வந்த விஷ்ணு, ஆரம்பித்தான்", யாரும் கவலைப் பட வேண்டாம். யாராவது திருட்டுத்தனம் செய்வாங்கன்னு ஏற்கனவே யோசிச்சு ஒரு வழி செஞ்சிட்டேன் போன மாசமே", என்றான் 

"என்னது? விளக்கமா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

விஷ்ணு பேச ஆரம்பித்தான், "என்னோட லேப்டாப்ல மூணு வித லாகின் இருக்கும். ஒன்னு ஒரிஜினல் டேட்டா இருக்கும். இந்த லாகின் நேம இப்ப சொல்ல விரும்பல. ரெண்டாவது லாகின் 'vishnu',  மூணாவது 'vishnu '. ரெண்டாவது மற்றும் மூணாவது லாகின் நேம் டைப் பண்ணச்சே ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனா, ரெண்டாவதுக்கு இன்னும் சில லெட்டர்ஸ் இருக்கு. மொதோ ஆறு எழுத்துக்கு மேல டிஸ்ப்ளே ஆகாது. செட்டிங்க்ஸ் அப்படி. மத்த ரெண்டு லாகினுக்கும் பாஸ்வேர்ட் ஒண்ணுதான். அவங்க இருந்தப்ப, நா ரெண்டாவது லாகின்ல என்ட்டர் பண்ணேன். ரெண்டாவது மூணாவது அக்கவுண்ட்ல இருக்குற டேட்டா எல்லாம் போலி. 'சிஸ்டமேடிகலி கரப்டட்' டேட்டாதான். ப்ளான் பண்ணி டேட்டால  தேவையில்லாத அல்லது குழப்பம் தர்ற தகவல, திணிச்சிட்டேன். மேம்போக்கா படிச்சா அத கண்டுபிடிக்க முடியாது. டேட்டாவ கரப்ட் பண்றதுல பல லெவல் இருக்கு. மூணாவது லாகின்ல இருக்குறது ஹைலி கரப்டட் டேட்டா", எனச் சொல்லி சற்று மூச்சு வாங்கினான். தொண்டைக்கு இதமாக இளஞ்சூடு தண்ணீரை தாரை வார்த்தான்.

"எதுக்கு மூணு லாகின் ? ரெண்டாவது லாகின்லையே ஹை லெவல் டேட்டா கரப்ஷன் வெச்சிருக்கலாமே?" எனக் கேட்டார் கண்ணபிரான்.

அங்கதான் விஷயமே இருக்கு. என்னோட ஒரிஜினல் டேட்டா என்னோட லேப்டாப்ல மட்டுமே இருக்கு. நா ரெண்டாது லாகின்ல என்ட்டர் பண்ணி, ஸ்க்ரீன்ல  ஐகான் எதுவும் இல்லாத ஒரு பர்டிகுலர் ஸ்பாட்ல மூணு தடவ க்ளிக் பண்ணா ஒரிஜினல் டேட்டாவ இங்க இருக்கற மெயின் கம்பியூட்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு முதலாவது லாகின் அக்கவுன்ட்ட டெலீட் பண்ணிடும். அப்புறம் லேப்டாப்ப இந்த கட்டிடத்த விட்டு வெளிய எடுத்திட்டு போயி, எப்ப மூணாவது அக்கவுண்ட்ல லாகின்  பண்ணாலும் ரெண்டாவது லாகினையும் அக்கவுண்டையும் டெலீட் பண்ணிட்டு, லாப்டாப் கீழ் பக்கத்துல நா வெச்சிருக்கற அல்ட்ரா-ஸ்லீக் கைபேசியை ஆக்டிவேட் பண்ணிடும். உடனே அந்த சிம் என்னோட மொபைலுக்கு கால் பண்ணும். லேப்டாப்ல இருக்குற மொபைல் சைலென்ட் மோட்ல இருக்கு, அதனால யாருக்கும் நடப்பது என்னனு தெரியாது. இப்பலாம் எல்லா இடத்துலையும் சிக்னல் டவர் இருக்குறதுனால எனக்கு தொடர்ந்து அந்த லேப்டாப் இருக்குற இடம், ஜி.ஆர்.பி.எஸ் மூலமா தெரியவரும்", என அங்கிருந்த மானிட்டரை காண்பித்தான். விஷ்ணு பேசி முடித்து விட்டு, மேடை மீதிருந்த கோகுல் விட்டுச் சென்ற துண்டுச் சீட்டைப் எடுத்து அதனை தனது அருகில் வைத்தான். அதில்,
Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு
என்றிருந்தது. 

அதனை கவனித்த அவனது அதிகாரி, விஷ்ணு தனக்குத் தந்த துண்டுச் சீட்டையும்  அதனருகே வைத்தார்.  அதனை கவனித்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், விஷ்ணுவின் அருகில் சென்று பார்த்தார். இந்த சீட்டில்
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
என்று இருந்தது.

படம் உதவி :  http://www.parisalkaaran.com/2011/09/2011.
ஏதோ கண்ணபிரான் சொல்ல ஆரம்பிக்க, மேசைமீதிருந்த விஷ்ணுவின் கைபேசியில் 'Vishnu  Informer Calling', என வருவதும் சரியாக இருந்தது. 'லேப்டாப்ல இருக்கற என்னோட வேற மொபைல் தான் அந்த இன்ஃபார்மர்", எனச் சொல்லிக்கொண்டே அழைப்பினை ஏற்றுக் கொள்ளாமல் சிவப்பு பட்டனை அழுத்தினான். நடந்து சென்று வேறு ஒரு எலெக்ட்ரானிக் உபகரணத்தை உயிர்பித்தான். பெரிய மானிட்டரில், லேப்டாப் தற்போது இருக்கும் இடத்தை ஜி.பி.ஆர்.எஸ் மூலம் உடனுக்குடன் தகவல் தர ஆரம்பித்தது.

--- முற்றும் 

பின்குறிப்பு : 'குறியீடு' என்பது பாஸ்வேர்டை மட்டும்  குறிக்க வேண்டுமென்பதல்ல. யூசர் நேமை குறிக்கும் சொல்லாகவும் இருக்கலாமல்லவா?
நாங்களும் மாத்தி யோசிப்போமில்ல !

நன்றி : கும்மிக் குழுவின் 'Hunt for Hint' கடைசி லெவல்.

டிஸ்கி : 
சவால் சிறுகதைப் போட்டி - 2011 க்காக எழுதப்பட்டது. படம், வர்ண வரிகள் இவற்றோடு கதையை தொடர்பு படுத்தவேண்டும் என்பது சவால். நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் 90 % மதிப்பெண்களும், மீதமுள்ள 10  %  யுடான்ஸ் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்போகிறார்களாம். விதிமுறைகளைப் படிக்க இங்கே செல்க.

தீபாவளியும் நானும் - ஒரு ஃப்ளாஷ் பேக்

வருஷத்துக்கு ஒரு தடவை வர்றதுனால பண்டிகை தினம் எல்லாமே நல்ல ரசிச்சு.. ரசிச்சு கொண்டாடணும். அந்த வகையில எனக்கு தீபாவளி ரொம்ப பிடிக்கும். அது பத்தி ஒரு ஸ்மால் பதிவு.

சின்ன வயசுல.. ஸ்கூல் போற சமயத்துல விஜய தசமி வந்தாலே தீபாவளி பத்தி நெனப்பு ஆரம்பமாயிடும். அப்பலாம் அந்தளவுக்கு ரெடிமேட் ட்ரெஸ் மோகம் அதிகமா கெடையாது. துணி வாங்கி டைலர் கிட்ட கொடுத்து அளவா தைச்சிப்போம். தீபாவளி நெருங்க நெருங்க, டைலர் துணி ஆர்டர் வாங்க மாட்டாரு, கமிட் பண்ணிட்டா தீபாவளிக்குள்ள தைச்சு கொடுக்கணுமே அதான்.

தீபாவளிக்கு கண்டிப்பா மூணு நாலாவது ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. சனி, ஞாயிறு சேர்ந்து வந்தா அஞ்சு நாலு லீவு கூட கெடைக்கும். தீபாவளிக்கு முன்னாடி கடைசி ஸ்கூல் டேஸ்ல, அரைநாள் பள்ளிக் கூடம்தான். அந்த மத்தியான நேரத்துலேருந்து நண்பர்களோடு லூட்டிதான்.. கடைக்கு போயி வெடி வாங்குறது.. நண்பர்கள் ஒவ்வொரு வீடா வெடி வெடிக்க ஆரம்பிச்சுவோம்.

தீபாவளி முதல் நாள் காலையில் வெளியூரில் இருக்கும் அண்ணன்கள் வருவார்கள். ஸ்வீட்ஸ் பாக்ஸ், புது ட்ரெஸ்னு ஒவ்வொன்னா எடுத்து எல்லாருக்கும் காமிச்சு, கதை, அரட்டைன்னு.. அப்படியே சாயந்திரம் வந்துடும். ஈவினிங் கலர் மத்தாப்பு, கலர் ராக்கெட், ரயில்னு கண்ணுக்கு விருந்தளிக்கும் பட்டசலாம் கொளுத்துவோம். நைட்டு, அண்ணனோட சேர்ந்துக்கிட்டு, கடைக்குப் போவோம்....  ராத்திரி முழுவதும், ஜன சந்ததியோட கடைத் தெரு ஜக ஜோதியா இருக்கும். எதுவுமே வாங்கலைன்னாலும் இந்த ராத்திரி கடைவீதி விசிட் என்ஜாய் பண்ற மாதிரி இருக்கும்.

அப்புறமா அரையும் கொறையுமா தூங்கும் போது அம்மா எழுப்பி விடுவாங்க.. சூரிய உதயத்துக்கு முன்னாடியே எண்ணெய் தேச்சு குளிக்கணும்னு எழுதப் படாத விதிபோல. இருந்தாலும் அது ஒரு தனி சொகம்தான். குளிச்ச ஒடனே புது ட்ரெஸ், பட்டாசு, தின்பண்டம்னு, காலை பத்து-பதினோரு மணி வரைக்கு ஓடிடும். அப்புறம் நண்பர்கள் வீட்டுக்கு செட்டா விசிட் பண்ணுவோம். லஞ்ச வரைக்கும் ஒவ்வொரு பிரென்ஸ் வீடா போயி.. வெடி, இனிப்பு/காரம்னு வயிறு ரொம்பிடும். ம்ம்ம்ம்.. மனசும்தான்.

இந்த மாதிரி இனி ஒரு தடைவ தீபாவளி கொண்டாட முடியுமா.. ? நண்பர்கள் ஒவ்வொருத்தரும் வெவ்வேற ஊருல செட்டில் ஆயிட்டதால கஷ்டம்தான். அட்லீஸ்ட் சொந்த பந்தகளோட கொண்டாடலாம்.. அதாவது முடியுதே, மகிழ்ச்சி.

தொண்ணூறுகளின் பின்னால் எப்படியோ தீபாவளி கொண்டாட்டத்த டி.வி ஆக்கிரமிக்க ஆரம்பிடிச்சு... நல்ல வேளை இப்பலாம் தீபாவளி சிறப்பு (!) நிகழ்ச்சி பாக்குறதில்ல. பிடிக்கல.

நான் தெரியாமத்தான் கேக்கறேன் சினிமா நடிக நடிகையர்கள் மட்டும்தான் தீபாவளி கொண்டாடுவாங்களா ?

அதென்ன.. எந்த பண்டிகையா இருந்தாலும் சினிமா சம்பந்தப் பட்ட ஆளுங்க மட்டுமே தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சில வராங்க.. அதும் என்னைக்கோ கொண்டாடின தீபாவளி போன்ற ஒரு நிகழ்ச்சியை அன்னைக்கு.. அப்பத்தான் கொண்டாடுற ஒரு பில்ட் அப்.. தேவையா.. ?

நல்ல நாள், பண்டிகையும் அதுவுமா, வயலென்ஸ்.. சண்டை. துப்பாக்கி, பாம்.. பழிவாங்கல். இப்பார் ஒன்னல்லு நாலஞ்சு படம் .. பாத்து பாத்து செலெக்ட் பண்ணுவாங்க போல.

என்னது.. நீங்கலாம் ரொம்ப வருஷமாவே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை, இந்த ஒரு காரணத்துக்காகவே  பாக்குறதே இல்லையா ? வெரி குட் !

சொந்த பந்த, சுற்றமும் நட்போட, நல்லா ரசிச்சு ருசிச்சு தீபாவளி கொண்டாட
"இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. "
-----------------------------


பஸ்ஸில பண்ண கலாட்டா

கூகிளில் பஸ்ஸில, ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன்.. இதோ உங்களுக்காக.. 

--------------------------------
மாதவன் : பயணம் செய்யமுடியாத பஸ் எதுன்னு சொல்லு..
பன்னிக்குட்டி ராம்சாமி : கொலம்'பஸ்' , சில'பஸ்', & இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கூகிள்'பஸ்'
 ----------------------------
ரொம்பநாளா வயித்து வலியால செல்வா கஷ்டப் படுறதால, டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணப் போனாரு..

டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : இந்த பிராப்ளத்துக்கு இதுக்கு முன்னால எந்த டாக்டர்கிட்டயாவது போனீங்களா ?
பேஷன்ட் 
செல்வா : பக்கத்துத் தெரு டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி ஒரு தடவ போயிருக்கேன்..
டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : அவரா ? ... யாருக்குமே நல்லதா வைத்தியமோ மெடிகல் அட்வைஸோ பண்ணத் தெரியாதே.. என்ன மெடிகல் அட்வைஸ் பண்ணாரு ?
பேஷன்ட்
செல்வா : மேற்கொண்டு உங்கள கன்சல்ட் பண்ணச் சொன்னாரு..
டாக்டர்
Ramesh Subburaj : !!!!!!!!!!!

------------------------------------------------------------
 வாய் மொழி உரையாடல்

Terror Pandian : God இருக்கார்னு நம்புறியா ?
Ramesh Subburaj : அமாம்.. நிச்சயமா இருக்கார்
Terror Pandian: எப்படி சொல்லுற ?
Ramesh Subburaj : நா, நேர்லய பாத்திருக்கேனே !
Terror Pandian : எப்போ ?
Ramesh Subburaj : டிரையிணுல போறப்பலாம் கடைசி பெட்டில பாத்திருக்கேன்..
Terror Pandian : அடப்பாவி.. அவரு 'Gaurd'டா, நா கேட்டது 'ஜி. ஒ. டி' GOD 

------------------------------------------------------------- 
மாதவன்(நெசமாவே நாந்தானுங்கோ ) : ஆராவது(யாராவது) தலையில குட்டினா அதுதான் 'ஆர்குட்'டா ? (டவுட்டு)
 அனு  :  6 times good = ஆறு குட் = ஆர்குட்
-------------------------------------------
என்னோட ஆன்லையன் பேங்கிங் பாஸ்வேர்டு லாக் ஆயிட்டுது.. இன்னைக்கு பூரா ரிலீஸ் ஆகாது.. அதுனால, உங்கள்ள யாரவது உங்க பாஸ்வேர்ட் கொடுத்தா யூஸ் பண்ணிட்டு நாளைக்கு பத்திரமா பாஸ்வேர்ட திருப்பி தந்துடுறேன்..
-------------------------------------------------------

மார்னிங் வாக்கிங் போனப்ப, ஒரு வீட்டு சுவத்துல விளம்பர போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க.... அதுல அப்படி ஒன்னும் சுவாரஸ்யம் இல்ல. ஏற்கனவே ஏதோ எழுதி இருந்த இடத்துக்கு மேல அத மறைச்சு இந்த போஸ்ட் ஓட்டிட்டாங்க.. எனக்கு, அதுக்கு கீழ என்னதான் எழுதி இருக்குனு பாக்குறதுக்கு ஆசை.. .. போயி அஞ்சு நிமிஷம் கஷ்டப் பட்டு மேல இருந்த போஸ்டர கிழிச்சுப் பாத்தா.. அங்க என்ன எழுதி இருந்திச்சு தெரியுமா ?
.......................................
......................................
................................
................................
......................................
......................................
................................
......................................
...............................
......................................
................................
.................................
......................................
......................................
................................
................................
இங்கு போஸ்டர் / விளம்பரம் செய்யாதீர்கள்.


டிஸ்கி : இதற்கு சிரித்து கமெண்டு போடாதவர்கள் தலை விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் சொல்லுவதுபோல சுக்கு நூறாக உடைந்துவிடும்.
------------------------------------------------------

நிகழ்வுகள் (Oct, 2011)

இந்த பிலாகுல, என்னோட சொந்த விஷயங்கள / நடந்த நிகழ்ச்சிகள அதிகமா எழுதினதில்ல.. நம்ம பொலம்பல எதுக்கு இங்க எழுதி வாசகர்கள (!) கஷ்டப் படுத்தணும்னுதான். இருந்தாலும் உபயோகமா (!) இருக்கும்ணு மனசுல பட்டா, அத எழுதுறது வழக்கம். அந்த வரிசையில இதோ...

நேத்திக்கு, ஆன்லயன்ல ரயில் பயண ரிசர்வேஷன் செஞ்சேன்.. தொன்னூத்தி ஒண்ணா நாள் பயணத்துக்கு இப்படி அட்வான்சா ரிசர்வ் செஞ்சாத்தான் உண்டு.. இல்லீன்னா அப்புறம் இடம் கெடைக்காது.. தீபாவளி வர்றத்துக்கு முன்னாடியே, பொங்கல் பயணத்துக்காக.காலையில ஏழு அம்பதுக்கே உக்காந்து ரெடி பண்ணினேன்.. ரிசர்வேஷன் ஆரம்பிச்ச பத்தொம்பதாவது நிமிஷத்துல எனக்கு சான்ஸ் கெடைச்சுது.. சர்வர் அவ்ளோ இழுபறி.. என்ன செய்ய..


வெயிட் லிஸ்ட்லதான் சீட் கெடைச்சுது.. இருந்தாலும் வெயிலிஸ்ட் அம்பதுக்குள்ள இருந்துச்சி, புக் பண்ண நாலஞ்சு மணி நேரத்துக்குள்ள பத்து பேரு கேன்சலும் பண்ணிருக்காங்க.... நம்ம நெலம தொடர்ந்து முன்னேறுமா .. ம்ம் பாக்கலாம்.. 

ரயிவே சர்வர்தான் ஸ்லோன்னு இல்ல பேமென்ட் gateway வங்கியும் ஸ்லோவா இருந்திச்சு.. அந்தக் குழப்பத்துல நானும் தப்புத்தப்பா (எப்படியோ)  பாஸ்வேர்ட் டயிப் பண்ணிட்டேன் போல.. என்னோட ஆன்லையன் அக்கவுன்ட் டிசெபில் ஆயிடிச்சு.. தெரிஞ்ச ஒருத்தரோட அக்கவுன்ட வெச்சு புக் பண்ணினேன். புக்கிங் ஆனா போதுமே.

இந்த ஆன்லையன் அக்கவுன்ட் அடுத்த நாள் ஆக்டிவ் ஆயிடும்.. அதனால கவலை இல்லை.( அப்புறமா ஆக்டிவ் ஆயிடிச்சு.. செக் பண்ணிட்டேன்)

அந்தோ பாருங்க.. நேத்திக்கு ஈவினிங் 'ஏ.டி.எம்'லயும் பாஸ்வேர்ட் தப்பா போயிடிச்சு.. அதுவும் லாக்.. இருப்பத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தான் அதுக்கு விடிவு காலம் வருமாம். எவ்ளோவோ பண்ணிருக்கோம்.. வெயிட் பண்ண மாட்டோமா?.

பாஸ்வேர்ட் ரெகவரி சிஸ்டம் இன்னும் பெட்டரா இருந்தா தேவல.. ஆங்.. பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதுக்கு எந்த பங்கமும் வரக்கூடாது..

என்னமோ மனசில பட்டது.. எழுதிட்டேன்.. வங்கி/பணபரிமாற்ற  விஷயங்கள்ல கவனமா இருக்குறது எப்பவுமே நல்லது....
--------------------------------------------------------------------

ச்சும்மா ஒரு குசும்பாட்டம் !

எடக்கு  மடக்கா யோசிச்சா அதோட பலன்.. இதோ இந்தப் பதிவு..

ஒன்னும் பெரிசா இல்லைங்க சாமி.. ஜஸ்ட்.. டாஷ்போர்டுல, நான் ஃபாலோ பண்ணும் பிலாகுல அப்டேட் ஆன லேட்டஸ்ட் பதினொன்னு போஸ்டுக்குப் போயி, போஸ்ட் படிச்சேனோ இல்லையோ.. இப்படி பின்னூட்டமிட்டு வந்தேன் (8th Oct 2011, around 4:30 PM IST)

"ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்"
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

இதப் படிச்சிட்டு அந்தப் பதிவாசிரியர் எப்படி ரியாக்ட் பண்ணுறார்னு பாத்தேன். ஒவ்வொருத்தரும் ஒரே விஷயத்த தங்களோட அப்போதைய சூழ்நிலைக்கேற்ப புரிஞ்சிப்பாங்க ... ரியாக்ட் பண்ணுவாங்க..  இதோ அவர்களோட ரியாக்ஷன்.
---------------------------------------------------------
1) நண்பர் ஆர்.வீ.எஸ். கலக்கும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்.

RVS said.. @Madhavan Srinivasagopalan
மாதவா! கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா? :-))
---------------------------------------------------------
2) ரமணி சார் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

Ramani said...@Madhavan Srinivasagopalan
எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு பின்னூட்டமிட்டு கலங்க அடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கத்தின் புகழ் ஓங்குக..
---------------------------------------------------------
3) மாதவி மேடம் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

middleclassmadhavi said...@ Madhavan Srinivasagopalan
Aamam, enakkum vijay tv-yil, 'athu ithu ethu' program pidikkum! ----- sangath thalaivi post enakku thanE?
-----------------------------------------------------
4) பெயர் சொல்ல விருப்பமில்லையோட இந்தப் பதிவுல கிடைச்ச பதில்

பெசொவி said.. @Madhavan Srinivasagopalan
கீ போர்டு கீ போர்டுன்னு சொல்றீங்களே, அப்போ "லாக்" போர்ட்ன்னு ஒன்னு இருக்குதா?

---- சம்பந்தப் பட்டவர்கிட்ட சம்பந்தமில்லாம பேசுவோர் சங்கம் ---------------------------------------------------------
5) பன்னிகுட்டி ராமசாமி எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... @ Madhavan Srinivasagopalan...
தண்ணியும் வீணா போயிடுமே,அத ஏன் சொல்லல? (ஆமா நீங்க எந்தத் தண்ணிய சொல்றீங்க?)
--------------------------------------------------------
6) நண்பர் வெங்கட் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

வெங்கட் said... @ மாதவன்.,
இதென்ன உங்க பரிட்சை பேப்பர்னு
நினைச்சீங்களா..? History-ல கேள்வி
கேட்டா.. Physics-ல இருந்து பதில்
சொல்றீங்க..?!! ( அதுவும் தப்பு தப்பா).
-----------------------------------------------------
7) குழுவாக நடத்தும் 'எங்கள்' பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

எங்கள் said... @Madhavan Srinivasagopalan 
நன்றி (?) மாதவன்

 [ 'எங்களு'க்கு புரியவில்லை போலும், எனவே (?) குறி வந்ததோ ? ]
---------------------------------------------------------

பின்வரும் பதிவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.. நேரமின்மை காரணமோ ?

8) ஆதிமனிதன் எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

9) தம்பி (மொக்கை)செல்வா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

10) நண்பர் பாலா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

11) நண்பர் கோபி எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

---------------------------------------------------------

ஹி.. ஹி.. நா அப்படி ஒன்னும் வித்தியாசமா செய்யலையோ ?
=====================================

சரஸ்வதி பூஜை - 2011

இன்றைக்கு சரஸ்வதி பூஜை. எதேச்சையாக கூகிள் படங்களில், 'சரஸ்வதி' தெரிந்தாலும், பல படங்களில் ஒன்றே ஒன்று மட்டும் எனது கண்களுக்கு பளிச்செனத் தெரிந்தது.. ஏன்.. ஏன்.. ஏன் ?
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்த நாட்களில், பள்ளியில் சரஸ்வதி பூஜை மதியம் மூன்று மணி சுமாருக்கு நடக்கும். 'படிக்க வேண்டாம், சுண்டலும் கிடைக்கும்', இந்த இரு காரங்களினால் ஆசையாக பள்ளிக்கு செல்லும் ஒரே நாள், இந்த நாள். அங்கு சரஸ்வதியின் படம் (கண்ணாடி ஃபிரேம் போட்டிருக்கும்) வைத்து பூஜை செய்து பின்னர் கருப்பு கொண்டக் கடலை சுண்டல் கொடுப்பார்கள். அந்தப் படத்தினை (நன்றி கூகிள்) பல வருடங்களுக்குப் பின்னர் கூகிள் இமேஜாகப் பார்த்தேன் இன்று.. முப்பது வருடங்களுக்கு முன்னாள் நடந்த நிகழ்ச்சி கண்முன் வந்து போகிறது. 
" மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி..
செந்தமிழ் சொல்லெடுத்து  பாடவந்தோம்.. .."
இந்தப் பாடல் பொதுவாக இன்றைய தினம், கொலு வைத்த எல்லார் வீட்டிலும் பாடப் படும்.  அதுவும் நினைவில் வருகிறது..

இந்தியாவின் நாளைய தூண்கள், இன்றைய மாணவர்கள் நல்ல கல்வி, வித்தை கற்று வாழ்வில் தனக்கும், சமூகத்திற்கும் நல்லது செய்து நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள். கலைவாணி அதற்கு அருள் புரிய வேண்டி இப்பதிவு.

மன்னை எக்ஸ்பிரெஸ் (Mannai Express )

அறிவிப்பு :
ஒரு வார காலமாக அலுவல் பணி நிமித்தமாக அசலூர் சென்றதால் வலைமனையில் நேரம் செலுத்த இயலவில்லை. ஒரு வார காலத்தில், எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் மறுமொழி / நன்றி சொல்ல இயலவில்லை.  -- அனைவருக்கு நன்றிகள். அதே போல நான் பின்தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமோ, ஒட்டுக்களோ அளிக்க இயலவில்லை. -- இவற்றிற்காக போது மன்னிப்பு வேண்டும், உங்கள் 'மன்னையின் மைந்தருள் ஒருவன்'
 -------------------
மன்னை எக்ஸ்பிரஸ் : (இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும்)
ஒரு காலத்தில் இயங்கிய எங்கள் ஊர் ரயில் நிலையம் எனக்கு நினைவு தெரிந்தது முதல் இயங்கவில்லை. அந்த சின்ன வயதில், எங்கள் ஊரில் ரயில் நிலையம் இல்லாததால், பேருந்தில் வெளியூர்களுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் கடக்கும் போது கேட் மூடப் பட்டிருந்தால், ரயிலை பார்த்து ரசிப்பேன். அவ்வளவு ஆசை ரயில் மீது. ஏக்கம் எங்கள் ஊரில் ரயில் நிலையம் இல்லாதது. கடந்த இருபத்தியேழாம் தேதி முதல் எங்கள் ஊரில் ரயில் நிலையம் ஆரம்பிக்கப் பட்டு, சென்னைக்கு நேரடியாக 'மன்னை' எக்ஸ்பிரெஸ் எனும் பெயரில் தொடர் வண்டி இயக்கப் படுகிறது. இனி எங்கள் ஊருக்கு செல்லும் போது நேரடியாக ரயிலில் செல்லலாமே !   Something to be happy about.
------------------
மும்பை எக்ஸ்பிரெஸ் ரயில் பயண அனுபவம்
அலுவல் பணி நிமித்தம் மும்பை சென்று ஊர் திரும்பும் வழியில், எனது நண்பரின்(!) செல்ஃபோன் காணாமல் போய்விட்டது. ஆதலால், (அவசியமாக!!)தேவைப்படும் போது எனது செல்ஃபோனை பயன் படுத்தலாமென (உதவி செய்வதாக நினைத்து) சொன்னேன். இருந்தாலும் அப்படியொரு நண்பர் இருக்க வேண்டாம்.. ..  காலையில் சுகமாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் (சுமார் ஐந்தரை மணி போல) எனை எழுப்பி..  ஃபோன் வேண்டுமெனக் கேட்டார்.  தனது மனைவிக்கு ஃபோன் செய்து தான் காலையில் எழுந்து பல் தேய்த்து டீ குடித்து விட்டதாகவும் சொன்னார். இரண்டு மணிக்கொருதரம் எனது ஃபோன் மூலம், மனைவிக்கு லைவ் அப்டேட் செய்து வந்த வண்ணமிருந்தார். ரோமிங்கில் இது தேவையா? அதுவும் அடுத்தவரின் ஃபோனிலிருந்து இப்படி செய்வதா? கடைசி ஒரு மணி நேரத்தில் நான்கு முறை தனது மனைவிக்கு ஃபோனில் பேசியவண்ணம் பயணம் செய்தார். ஊர் வந்தவுடன், இறங்கிய பின்னரும் லேட்டஸ்ட் அப்டேட், எனது ஃபோன் மூலம்தான். 

இதெல்லாம் பரவாயில்லை.. கடைசியில் நன்றி கூட சொல்லாமல் ஆட்டோ பிடித்து பறந்து சென்றுவிட்டார். இத்தனைக்கும் இவர் புதுக் கணவர் அல்ல.. ஆறேழு வருட மண வாழ்க்கை அனுபவம் கொண்டவர். 

ஆண்டவா.. இனிமேல் இவருடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு வேண்டவே வேண்டாம்.. அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால், அவரது செல் ஃபோன் காணாமல் போக வேண்டாம். அட்லீஸ்ட் அவரோட செல்ஃபோன் பத்திரமாக இருக்க நான் பார்த்துக் கொள்ள வேண்டும்..

செல் ஃபோனால் வரும் தொந்தரவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாமா ?

டிஸ்கி : நல்ல வேளை.. அவரால இந்த பதிவ படிக்க முடியாது..  அவருக்கு தமிழ் தெரியாதில்ல.. !!