சென்ற 7ம் தேதி முதல் இன்று(14ம் தேதி) காலை வரை அலுவல் பணி சம்பந்தமாய் வெளியூர் சென்று வந்ததால் வலைமனையில் ஈடுபட முடியவில்லை. முக்கியமாக 10ம் மற்றும் 11ம் தேதியில் ஓரிரு நிமிடங்கள் வரையில் மட்டுமே எனது ஈ-மெயில் பார்க்க முடிந்தது. நான் வழக்கமாக பின்தொடரும் பதிவுகள் உட்பட எந்த வலைமனை பதிவுகளையும் படிக்கவும் முடியவில்லை. எனவே பல்வேறு பதிவுகளுக்கு எனது பின்னூட்டம் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்த (!) பதிவர்கள் அனைவருக்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊருக்கு திரும்பும் வழியில், வலைமனை நண்பர் வெங்கட் நாகராஜ் தில்லியில், என்னை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று ஷாப்பிங்கில் உதவி செய்தும், பின்னர் தனது இல்லத்தில் சுவையான தென்னக-விருந்தை மதிய-உணவாக வழங்கிய அன்னாரின் துணைவியாருக்கும் (இவர் கோவை-டு-டெல்லி என்ற வலைப்பூவின் ஆசிரியர்/உரிமையாளர்) மனமார்ந்த நன்றிகள். தமிழ் வலைமனை உலகில் நான் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர், எனக்கு அறிமுகமான (இங்கு வருவதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் தவிர்த்து) வலைமனை நண்பர்களுள், நான் நேரில் சந்தித்த முதல் நபர், வெங்கட் நாகராஜும் அடுத்த நபர் அவரது துணைவியாரும் தான். மூன்றாவது நபர் நீங்களாகவும் இருக்கக் கூடும், காலம்தான் பதில் சொல்லும்.
சவால் சிறுகதையில் நானும் கலந்து கொண்டு எழுதிய கதைக்கு இங்கு சுருக்கமாக விமர்சனம் செய்துள்ளார் நண்பர் ஆதி. அவருக்கு நானும் எனது நன்றியையும் விளக்கமும் கொடுத்துள்ளேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில், சொல்ல மறந்த மேலும் ஒரு விளக்கம்.
"லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன."
இது அறிவியல் கற்பனைக்கதை அல்ல. சாத்தியமாகக் கூடிய முறைதான். விவரம் தெரிந்தவர்கள் ஆழ்ந்து படிக்கலாம். விவரம் புரியாதவர்கள் மேலோட்டமாக அப்படி ஒரு முறை இருப்பதை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தான் கதை சென்றுள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும் வாசகர்களுக்கு ஏதாவது எனது கதை பற்றி சந்தேகமிருந்தால் கேளுங்கள், கண்டிப்பாக பதில் சொல்கிறேன். தவறு இருப்பின் ஒற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை உடையவன் நான் (என்று நம்புகிறேன்).
சென்ற வருடம் போலவே எங்கள் குடியிருப்பு பகுதியில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டது. மாணவ மணிகள் இறையுணர்வும், தேசப்பற்றுடனும் ஆடலும் பாடலும் செய்து காண்பவர்களை மகிழ்ச்சியுறச் செய்தனர். சினிமாப் பாடல் இல்லாத ஒரு நிகழ்ச்சி மன நிறைவைத் தந்தது.