Showing posts with label மின்னல். Show all posts
Showing posts with label மின்னல். Show all posts

வெட்டியதாலும், செத்ததாலும் சாகாத நாயகி

"வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால் செத்திருப்பேன் ;
செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன் !"

புரியலியா... ?

அமாவாசை இரவு, கும்மிருட்டு, வானம் மெலிதாக தூரி கொண்டு இருந்தது. சற்று முன்னர் தான் இடி, மின்னலுடன் கூடிய பெருமழை பெய்து ஓய்ந்தது. நடக்கக் கூட கடினமாக இருந்தது நமது நாயகனுக்கு.  தனது நாயகியை காணப்போகும் ஆவலில் வெகு வேகமாக நடந்து நடந்து.. குறுப்பிட்ட இடத்தை அடைந்து, அங்கு அவளைக் காணாமல் திகைப்படைந்தான். சொன்ன நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சரியாக வரும் பழக்கத்தினை கொண்டவள் அல்லவா என எண்ணியவாறு காத்திருந்தான் . நேரம் செல்ல செல்ல, பயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. நாயகி வரும் வழி சற்று காட்டுப்பகுதி என்பதால் அவனது பயத்திற்கு ஒரு அர்த்தமிருக்கத்தான் செய்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் சற்று தூரத்தில் ஒரு பெண் நடந்து வருகிறாள் என்பதனை, கொலுசின் ஓசை தெருவித்தது. 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!' என்பது கொலுசு அணிந்த பெண்களுக்கும் பொருந்தும் தானே. (ஒப்புமை,  உருவத்தில் அல்ல. பெண்களே, தவறாக எண்ண வேண்டாம்) கொலுசு ஓசை கேட்டு நம் நாயகன் ஆறுதல் அடைந்தான் என சொல்லவும் வேண்டுமோ?  அருகாமையில் வந்து அவளை அடையாளம் கண்டு, அதே சமயத்தில் அவளைக் காணாமல் தான் அடைந்த வேதனையை நினைத்து, அவளைப் பார்த்து 'ஏன், தாமதமாக வந்தாய் ?, நேரம் கடந்து சென்றதால், நான் பட்ட கவலையை நீ அறியமாட்டாயா?' என்று கேட்டான்.

நமது நாயகியோ 'இலக்கிய நயம்' மிகுந்தவள். தனது தாமதத்திற்கான காரணத்தை, கவிதை நடையிலே பின்வருமாறு சொன்னாள்
"வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால் செத்திருப்பேன் ;
செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன் !"

நம்மைப்போலவே, அவனுக்கும் புரியவில்லை.. நாயகியோ "அவனிடம், நான் வந்த வழி வழக்கமானதாக  இருந்தாலும், மழை பெய்ததால், வரும் வழியில் திடீரென 'மின்னல்' வெட்டியதால் (மின்னியதால்) அதன் ஒளியின் மூலம், ஒரு புதை குழி இருப்பதை கண்டு, அதனுள் விழாமல் எனது உயிர் தப்பியது. (மின்னல்) வெட்டாவிட்டால், இறந்திருப்பேன் அல்லவா?" என்றாள்.


















மேலும்,  தொடர்ந்து பேசிய நாயகி, நாயகனிடம் "பின்னர் வரும் வழியில் கால்களுக்கிடையே சிக்கிக்கொண்ட நீளமான பொருளை கயிறு என நினைத்து, குனிந்து கைகளினால் எடுத்துப் பார்த்தால், அது கயிறு அல்ல, பாம்பு என்பதனை அறிந்தேன். நல்லவேளை, அது செத்த பாம்பு.. எனவே எனது உயிர் தப்பியது. அது மட்டும் சாகாவிட்டால், நான் செத்திருப்பேன் அல்லவா?" என்றாள்.
"இதெப்படி இருக்கு..?"

பின்குறிப்பு : மூலப் பொருள், நான்கைந்து வரிகளாக, ஆனந்த விகடன் இதழில்(அனேகமாக 1984 - 85 ல் , இலவச இணைப்பு புத்தகமாக -- அதாவது இலவச யுக்தி 25 வருடத்திற்கு முன்னரே இருந்தது), வெளிவந்தது. அதனை எனது (சொந்த) நடையில் இங்கே கொடுத்துள்ளேன்  (மாறுபட்ட, அசுத்தமான காப்பி --- நன்றி ஆ.வி )