
பள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு பதிமூன்று வயதிருக்கலாம்.. என்னை விட மூன்று வயது இளைய சிறுவனின் பரிந்துரையின் பேரில் ராஜேஷ் குமார் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். ராஜேஷ் குமார் நாவல்களில் பெரும்பாலும் சஸ்பென்ஸ்-கிரைம், துப்பு துலக்குதல் (டிடெக்டிவ்), சயன்ஸ் ஃபிக்ஷன் இதெல்லாம் கதையுடன் ஒட்டி இருக்கும். ஒரு சில சமூக நாவல்களும் எழுதி இருக்காரு. (உதா : 'காவ்யாவின் கருப்பு தினங்கள்')
கிரைம் நாவல் புத்தகத்தில் முக்கிய நாவலைத் தவிர ஐந்தாறு பக்கத்தில் வரும் சிறுகதைகளும் நன்றாக இருக்கும். அவருடைய கற்பனை கதா நாயகன் விவேக் தனது மனிவி ரூபலாவுடன் நடத்தும் 'அர்த்தமுள்ள அரட்டை' தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். நான் படித்த கிரைம் நாவல்களில் சிலவற்றைப் பற்றி சிறு குறிப்புடன் பட்டியல் இட்டுள்ளேன். இந்தக் கதைகள் அனேகமாக 1985 - 88 வருடங்களில் வந்தவை என நினைக்கிறேன்.
- 'ஹலோ டெட் மார்னிங்' -- இதுதான் நான் படித்த முதல் நாவலாகும். இது 'கிரைம் நாவல்' வரிசையில் நான்காவதாக வெளி வந்தது. கொலை போல ஆரம்பிக்கும் கதையினை, அது தற்கொலை என்று சரியான லாஜிக்குடன் முடித்திருப்பார்.
- திக் திக் திவ்யா - 'திவ்யா' ஒரே ஆளா.. இல்லை மூவரா என ஆச்சரியப் படும்படி கதை செல்லும். சொத்துக்கு ஆசைப் பட்டு திவ்யாவை கொலை செய்யும் நோக்குடன் அவரோட மாமா, சித்தப்பா இரண்டு பேரும் செய்கிற குற்றங்களை சஸ்பென்சாக சொல்லி இருக்கிறார் கதாசிரியர்.
- கற்றது டைமண்ட் களவு : கதைகேற்ற ஆனால் தெரிந்த பழமொழியை மாற்றி அதே மாதிரி ஒலிக்கும் ஓசை வருமாறு அமைந்த தலைப்பு. தலைப்பில் உள்ளது போல கதை 'டயமன்ட்' கடத்தலை மையமாகக் கொண்டது.
- நாளை யாரோ : கதை சரியாக ஞாபகமில்லை.. 'அற்புதா' என்ற வீரமிகுந்த பெண்துணிச்சலுடன் கெட்டவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்வது போல வரும். கடைசி வரிகள் 'இன்று அற்புதா.. நாளையாரோ ?' என முடியும்.
- மற்றுமொரு கதையில் (தலைப்பை மறந்துவிட்டேன்) விவேக்கின் கண்களை கட்டி, கெட்டவர்கள் தங்கள் இடத்திற்கு அழைத்து செல்வார்கள். பின்னர் விவேக்கை விட்டு விடுவார்கள். அவர்களிடம் மாட்டிக் கொண்டுள்ள மற்றவர்களை விடுவிக்க விவேக் அதேபோல கண்களை கட்டிக் கொண்டு காதில் விழும் சப்தங்களையும், வினாடிகளையும், காலால் வைக்கும் அடிகளையும் மனதில் கொண்டு அதேபோல செய்து, கயவர்களின் இடத்தை அடைந்து காப்பாற்றுவதாக வரும். 'குருதிப்புனல்' திரைப் படத்தில், ஒருவர் தனது அலுவல் மற்றும் சொந்த நண்பரை காப்பாற்ற அதே பாணியில் வருவது கண்டு 'காப்பி' அடிப்பதென்றால் என்ன என்பதை உதாரணத்துடன் தெரிந்து கொண்டேன். (ராஜேஷ் குமாரே வேறு ஒரு இடத்திலிருந்து காப்பி அடித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறு வருவதை, நான் முதலில் படித்தது ராஜேஷ் குமார் கதையில் தான்)
மொத்தத்தில் ராஜேஷ் குமாரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்களை படிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதில்லை வேறு மாநிலத்தில் இருப்பதால்.
(ஹி.. ஹி.. அதான் நாமளே பிலாகு எழுத ஆரம்பிச்சிட்டோமே ? )
(ஹி.. ஹி.. அதான் நாமளே பிலாகு எழுத ஆரம்பிச்சிட்டோமே ? )
நண்பர் மங்குனி அமைச்சர், அவர்களை இந்த பதிவினை தொடருமாறு வேண்டி (!) விரும்பி (!!) கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------

