'ஸ்ரீ' என்று லக்ஷ்மியை குறிப்பிடுகிறோம். எனினும் 'ஸ்ரீஜெயந்தி' என்று 'கீதை' வழங்கிய 'ஸ்ரீ கண்ணன் / கிருஷ்ணன் / மாதவன் / மதுசூதனன்' பிறந்த நன்னாளை கொண்டாடுகிறோம். கண்ணனைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது எதுவுமில்லை.. பல பெரியோர்கள் பல விதமாக அவனின் குணாதிசயங்களை சொல்லி நமக்குத் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.
இந்த நாளில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமிருந்து இரவு, அவன் வருகைக்கு காத்திருந்து.. அவனுக்கு பூஜைகள் செய்து, உணவு அருந்தி விரத்தத்தை பூர்த்தி செய்வது எங்களது வழக்கம். நமது முன்னோர்கள் அவ்வாறு வழக்கம் செய்து வைத்ததை கேள்வி கேட்காமல் தொடர்வது கூட என்னை பொறுத்த வரையில் நல்ல செயலாகும். அவ்வாறு செய்வதனால் ஏதாவது கஷ்டம் வருமாயின் (உ.தா. அல்சர், அசிடிட்டி உள்ளவர்கள்) விரதமிருபதை தவிர்ப்பது சரிதான். எந்த விதத்திலும் கஷ்டமில்லையானால், முன்னோர்கள் சொல் வழி செல்வது, மனதிற்கு மகிழ்வையும், புத்துணர்வையும் தருகிறது. இல்லத்தினை நன்கு தண்ணீரால் அலம்பி, துடைத்து, கோலமிட்டு, கண்ணன் வருவதற்கு வாசலிலிருந்து பூஜை அறை வரை அவனது பிஞ்சு பாதத்தினை பச்சை அரிசி மாவினால் மாக்கோலமிடுவார்கள் வீட்டிலுள்ள பெண்கள். படத்திலுள்ள கால்கள், நான் வரைந்தது (மூன்று வருடங்களுக்கு முன்னர்). சிலர் எட்டு போட்டும், சிலர் மாவு-நீரில் கைகளை முடிக்கொண்டு தோய்த்து தரையில் குத்து விட்டு கால்களின் அச்சுகளை உருவாக்கியும், அதன் மேல் 5 புள்ளிகள் வைப்பார்கள்.
சின்ன வயதில், விரதமிருக்காமல் இருந்தாலும், மாலை பூஜை எப்போது முடியும் எனக் காத்திருந்து.. அதன் பின்னர் கிடைக்கும் பலகார, பழ வகைகளை ஒரு கை பார்க்கும் சுகம் சொல்லி மாளாது. எங்கள் இல்லத்தில், வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அதிரசம், அப்பம், சுழியம்(ஆகார வகைகள்), நீர்மோர், பானகம் (நீர்வகை), ஆப்பிள், நாவல், பேரிகை, கொய்யா (பழ வகைகள்), புளியம்-பிஞ்சு ஆஹா.. ஆஹா.. எங்கள் அன்னையாரால் இத்தனை வகைகளை எப்படி செய்ய முடிகிறது.. இன்றைய தலைமுறை(நான் உள்பட) மக்களால் அன்றாட வேலைகள் கூட சுமையாக இருப்பதாகத் தோன்றுகிறது. அட மறந்துட்டேனே.. 'சர்க்கரை தூவிய சூப்பர் வொயிட் வெண்ணை' கூட உண்டு. இதெல்லாம் முதல் நாள் கொண்டாட்டங்கள். இரண்டாம் நாள் எங்கள் ஊரிருள்ள கோவிலில் 'உரியடி, வழுக்குமர' உத்சவங்கள் நடைபெறும். பார்க்க வேடிக்கை தான். 'உரியடி' ஒரு ஜுஜுபி வேலைதான்.. ஆனால் 'வழுக்குமரம்' சற்று ஆபத்தான சமாச்சாரம். அப்போது தெரியவில்லை.. இப்போது நினைத்தால்.. .. வழுக்கு மரத்தில் கவனமாக ஏறவேண்டும். எனக்கு ஒரு கஷ்டமு மில்லை.. நான் பார்வையாளன் தானே..
இவ்வாறே 'கண்ணன்' பிறந்த நாளை கொண்டாடி, இவ்வுலகில் எல்லோரும் துன்பத்திலிருந்து விடு பட்டு இன்பத்தில் திளைக்க அவனை வேண்டுவோம்.
'ஸ்ரீஜெயந்தி' - இதில் 'ஸ்ரீ' என்பது யாரைக் குறிக்கிறது ?
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
பின்குறிப்பு : நேற்று இரவு 8 மணிக்கு 'சிரிப்பொலி' தொலைக்காட்சியில் 'கண்ணனின் லீலைகள்' திரைப்படம் காண்பித்தார்கள்.... இன்றைய சராசரி திரைப்படத்தினை பார்க்கும் கண்களுக்கு, அந்த படம் மிக மிக நன்றாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தது. (ஆனால் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு இடையில் வந்த பிரேக் கஷ்டமாகத்தான் இருந்தது).

