Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

தெப்பத் திருவிழா - நினைவலைகள்

ஊர் ஒன்று கூடி கொண்டாடப் படுவதுதான் திருவிழா..

அவ்வகையில் எங்கள் ஊரில் அமைந்த பெரிய குளத்தில் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தம். பரந்து விரிந்துள்ள ஹரித்ராநதி எனும் குளத்தில் வருடா வருடம் ஆனி மாதம் பவுர்ணமி நன்னாளில் நடந்தேறும் இவ்விழா (Mannargudi Haridhranadhi Theppam), பத்து நாட்கள் கொண்டது. எட்டு நாட்கள் பாம்பு, கருடன், அனுமன், பல்லக்கு, குதிரை போன்ற வாகனத்தில் (பைக், கார், சைக்கிள், லாரி.. இதெல்லாம் நமக்குத்தான்.. ), ஸ்வாமியின் நகர் வலம் நடந்தேறும். ஒன்பதாவது நாளில் தெப்பத்தில் குளம் வலம் வரும் அவனை தரிசிக்கும் நமக்கோ குலம் வளம்.

தெப்பம் ஆடி ஆடி(ஆனி மாதத்தில்) அசைந்து குளத்தில் செல்வது தெப்பத்தினுள் இருந்தாலும், குளக் கரையில் இருந்து பார்த்தாலும் இனிமையாக இருக்கும். தெப்பம் குளத்தினுள் 3 முறை வலம் வரும். ஆனால் 3 முறையும் கரை ஓரமாகவே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பாதி கரையின் வழியாக ஒருமுறை மட்டுமே செல்லும். மற்ற பாதி வழியாக இரு முறையும்.. மையத்தில் இருக்கும் மண்டபத்தை அடைந்து அதனை ஒட்டி ஒன்றரை முறையும் செல்லும்.. (மூணு -- கணக்கு சரிதான  ?). மேலும் விளக்கம் படத்தில் இருக்கிறது.. பார்க்கவும். 
தெப்பம் பற்றி நினைத்தவுடன், எனது நினைவுகள் இவ்வாறாக செல்கிறது..
தெப்பத்தினுள் இருந்த படியே இரவு முழுவதும் தூங்காமல் வெண்ணில வானையும், இதமான இயற்கை குளிரையும் அனுபவித்த சுகமும் உண்டு. பின்னிரவின் பொது.. அதிக குளிர் ஆரம்பபமாகும். மைய மண்டபத்தில் சுமார் நாற்பது நிமிட ஓய்வும்  கிடைக்கும்.

எனது சிறிய தகப்பனார் வீடு இந்த குளக் கரையின் வடக்குப் பகுதியில் இருப்பதால் அந்நாட்களில், நாங்கள் இவ்விழாவின்போது அவர் இல்லம் சென்று கொண்டாடி மகிழ்வோம். ஹரித்ராநதி நண்பர்கள் குழு ஒரு சமயம் இந்நாளில், பஜ்ஜி வகை கடை போட்டனர். (வருடம் மறந்து விட்டது). நான் சென்றபோது, எனக்கு இலவசமாகத் தந்தனர் உண்பதற்கு.

வேறு ஒரு வருடம் ம்ம்.. 1990 ல்,  தெப்பத் திருவிழாவின்போது உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டம் நடந்தது.. எனது சித்தப்பா வீட்டில் தெப்பத் திருவிழாவிற்குப் போன நான், இரவு இங்கிருந்தே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நேரடி ஒளிபரப்பு பார்த்ததும் நினைவிற்கு வருகிறது. ஜெர்மனி அணி, அர்ஜென்டினானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அன்று நடந்த விம்பிள்டன் போட்டிகளிலும் ஜெர்மன் வீரர் பெக்கர் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றார் .. அதற்கு முதல் நாள் ஜெர்மனியின் ஸ்டேஃபிஃகிராப் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றார்.

வேறு ஒரு வருடம் 'மணல் கயிறு' திரைப் படம் -- சாலையின் நடுவில் பெரிய திரை கட்டி, ஓபன் ஏர் சினி-ஷோ, இலவசமாக.. மற்றொரு வருடம் 'தங்கப்பதுமை' படம்... ஒருமுறை நாட்டிய / கிராமிய / கலை நிகழ்ச்சிகள்.. ஒருமுறை திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி.. 

இப்படி வருடா வருடம் வெவ்வேறு விதமாக அமையும். இன்றைய இயந்திர வாழ்வில் வெளியூரில் உழன்று வரும் நான், எனது பிள்ளைகளுக்கு இந்த மாதிரி கொண்டாட்டங்களை நேரில் சென்று காண்பித்து  யாம் பெற்ற மகிழ்வை, அவர்களுக்கு  அளிக்க முடியவில்லையே..! ஆதங்கம்தான் வேறென்ன செய்வது தற்போது ?


இன்று (15 July) ஆனிப் பவுர்ணமி..

படங்கள் உதவி.. கூகிள் தேடல்.
தெப்பப் பாதை படம்..  சில படங்களை வைத்து நான் கணணி உதவியுடன், x -fig மூலம் உருவாக்கியது.
======================== 

ராத்திரியில் சூரியன்

இந்தியாவில் வருடத்தில் இரண்டு நாட்கள் இரவில் சூரியன் வரும்.. எங்கு தெரியுமா ?

முன்னுரை :
நள்ளிரவு சூரியன் (Midnight Sun) நாடு எது உங்களுக்குத் தெரியுமா ?
'நார்வே' என்று நீங்கள் படித்திருக்கலாம்.
கனடா, அலாஸ்கா (யு.எஸ்), டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷ்யா போன்ற பகுதிகளும் இந்த வகையில் இருப்பதாக விக்கிபீடியா சொல்லுகிறது. இந்தப் பகுதிகள் ஏன் இப்படி அழைக்கப் படுகிறது என்பதையும் விவரமாக சொல்லுகிறது. 
ராத்திரி சூரியன் - நார்வே
சரி இப்போது முதல் வரியில் சொன்ன கேள்விக்கு வருகிறேன். தமிழ் நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி(மதிலழகு) என அழைக்கப் படும் ஊரில், ஹி.. ஹி.. பில்ட் அப் போதுமா.. நா பொறந்த வளர்ந்த ஊருதான்..  அங்க தான் ராத்திரியில் சூரியன் வரும்.. அதுவும் வருஷத்துல ரெண்டு நாளு வரும்.. 

அந்த ரெண்டு நாளுல ஒரு நாள் -- இன்றே.. இன்றுதான்.. ( 1st ஏப்ரல் 2011 ). அட.. உங்களலாம் முட்டாளாக்க இப்படி சொல்லலை.. உண்மையத்தான் சொல்லுறேன். அட நம்புகப்பா..  நம்புங்க.. நா அந்தளவுக்கு டுபாக்கூர் ஆசாமி இல்லை.

ஊர் பேரு ராஜ மன்னார்-குடி, 'குடி' என்றால் கோயில், தெலுங்கு மொழியில். எங்க ஊரு ராஜா ஸ்ரீராஜகோபாலஸ்வாமிக்கு, பங்குனிப் பெருவிழா என்று வருடந்தோறும் திருவிழா வரும். பங்குனி மாதத்தில் ரோஹிணி  நக்ஷத்திரம் வரும் நாளில் தோரோட்டம் நடைபெறும். அது இவ்விழாவின் பதினேழாவது நாளாகும்.  அதாவது தேரோட்ட நாள் வருவதைப் பொறுத்தே மற்ற விழாநாட்கள் அமையும். முதல் பதினெட்டு நாட்கள் வெளி உலாவிலும் பின்னர் பன்னிரண்டு நாட்கள் கோவிலுக்கு உட்பட்ட வெளிப் புறத்திலும், ஆக ஒரு மாதம் முழுவதுமாக கொண்டாட்டம்தான். இறுதி நாளான முப்பதாவது நாளில் தெப்பத் திருவிழா அமையும்.

அந்த விழா நாட்களில் ஒருநாள், அதாவது பத்தாவது நாளில் சூரியப்ரபை எனும் வாகனத்தில் எங்களூர் அரசர் அமர்ந்து வருவார். இந்த நிகழ்ச்சி இரவில் நடைபெறும். அதாவது சூரியனின் மீதமர்ந்து இரவில் வீதி உலா வருவார் எங்க மஹாராஜா. இந்த வருடம் அத்தகைய நாள், இன்றேயாகும். அந்த ராத்திரி சூரியனைப் பார்க்க வேண்டுமா.. இதோ வலது புறத்தில், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் செய்யப்பட்ட சூரிய வட்டத்தின்(சூர்யப்ரபை)  நடுவே புல்லாங்குழலூதும் கண்ணன், எங்களூர் மன்னன்.
 
டிஸ்கி :
படங்களுக்கு நன்றி ---
======================================

தேசியப் பார்வையில் நவராத்திரி - தஸரா

நவராத்திரி திருவிழா.. நான் இந்த போஸ்டுல சொன்னா மாதிரி நமக்கு கொலு-சுண்டல் தான் ஞாபகத்துக்கு வரும். நாம் கொண்டாடும் முறை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சற்று தமிழகத்தை விட்டு வெளியே சென்று இருந்த / இருக்கும் பொது, அந்தந்த  இடங்களில் நவராத்திரி, தஸரா , எப்படி கொண்டாடுகிறார்கள்,  எனத் தெரிந்துகொண்ட விஷயங்கள்.

குஜராத் :
நான் 11 வருடங்கள் குஜராத்தில்  இருந்திருக்கிறேன்.  இங்கு நவராத்திரி என்றால் ஆட்டமும் பாட்டும் தான்.. நவராத்திரி என்பதற்கு உண்மையான அர்த்தத்தை விளக்குவதுபோல.. எல்லா கொண்டாட்டங்களும் இரவு 9 -10 மணி முதல் ஆரம்பமாகி.. பின்னிரவு 2 -3 மணி வரை நடைபெறும். இங்கும் பெண்களுக்கான விழாவாக  இருந்தாலும்.. ஆண்களும் கலந்து கொள்ளுவார்கள். பாரம்பரிய ஆடை அணிகலன்களை போட்டுக் கொண்டு அவர்கள் ஒவ்வொரு இரவும் 9 அல்லது 10 மணி முதலில் 'ஆரத்தி' எனப்படும், வழிபாடு / பூஜையினை செய்து ஆரம்பிக்கும் ஆட்டமும், பாடும் பாட்டும் -- அவர்களது 'பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும்'.

'அம்பா மா' எனப்படும் அம்பாள் / அம்மன் அசுரணை அழிப்பதற்கு, 9 இரவுகள் தூங்காமல் தவமிருந்ததாகவும்.. அவளுடைய தவத்தினை போற்றும் வகையிலும், அவள் தூங்காமல் இருக்கவும் மக்கள், பாரம்பரிய நாட்டியம் 'கர்பா' ( gharbha - घर्भा ), என்ற ஆட்டம் ஆடிவருவதாகவும் சொல்லப் படுகிறது. பெரிய வட்டமாக, அம்பாளை மையமாகவும் சுற்றி வருவார்கள். நமது வழக்கமான 'பிரதக்ஷன' கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு,  முறைக்கு நேர் எதிராக (கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என சுற்றுவார்கள்.


குஜராத்தில் தீபாவளி முடிந்த இரண்டாம் நாள் அவர்களது புத்தாண்டு தினம் வரும். ஆதலால், தீபாவளியை ஒட்டி அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூன்று வாரங்கள் வரை விடுமுறை அளிக்கப் படும். ஆதாலால்.. காலாண்டுத் தேர்வுகள் முடிந்தாலும் இந்த நவராத்திரிகளுக்கு விடுமுறை இருக்காது. அப்படி பள்ளி கல்லூரி நாட்களிலும் இள வட்டங்கள் மிக்க ஆர்வமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகும் இந்த நாட்கள்.

புதிதாக திருமணம் ஆனவர்களும், திருமணம் நிச்சயிக்கப் பட்ட ஜோடிகளும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் இந்த விழாக்களில். நாளடைவில் காதலர்களும் ஜோடியாக ஆரம்பித்து விட்டனர் என்று அந்த ஊரு பாட்டிமார்கள் சொல்லியிருக்கிறார்கள், என்னிடம். நாளடைவில் இந்த விழாவும் விபாபார மார்கத்தில் செய்யப்படுவதாகவும் அந்த ஊர் பெரியவர்கள் சொன்னார்கள்.

தாண்டியா -- இது நமக்கு பிரியச்சமான 'கோலாட்டம்' தான். இதையும் வட்ட சுற்றுப் பாதையில் செய்வார்கள். நீங்கள் இந்த ஆட்டத்தினை சினிமாவில் பார்த்திருப்பீர்கள்.. (படம் : காதலர் தினம் -- 'தாண்டியா ஆட்டம் ஆட...' என்று துவங்கும் பாடல்)   குஜராத்தில் நடு இரவில் பெண்கள் கூட தனியாகப் போகலாம் என்பது கண்டிப்பாக இந்த தினங்களில் உண்மைதானென நான் எனது கண்ணால் பார்த்திருக்கிறேன்.

ஆந்திரா :
இரண்டு வருடங்களாக நான் ஆந்திராவில் இருந்து வருகிறேன். சென்ற வருடம் நமது தமிழ்நாட்டில் நவராத்திரியை கழித்ததால்.. இந்த வருடம் தான் இவர்கள் கொண்டாடும் முறை தெரிய வந்தது.

நான் இருக்கு பகுதியில் ஒரு 'கம்யூனிடி ஹாலில்', அம்பாளின் ஒருவத்தினை பிரதிஷ்டை செய்து தினமும் காலை, மாலை, பூஜை, புனஸ்காரம் செய்து.. பிரசாதம் விநியோம் செய்வார்கள். பின்னர் நடனம், பாட்டு, பஜன், போன்ற வித விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு வித விதமான அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். அந்த அலங்காரத்தில் என்னை மிகவும் கவர்ந்து, ஆச்சரியப் பட வைத்த ஒன்று நேற்றைய முன்தினம் நடந்தது. அம்மனுக்கு அளித்த அலங்காரம் சுமார் 20 லட்சம் மதிப்பிலானது.  அத புகைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் அதன் மதிப்பை.... ஆனால் இந்த வித அலங்காரம் செலவினை குறைக்க உதவும்..  புரியவில்லையா ? படத்தினை பாருங்கள் புரியும்....


இதில் ஆயிரம், ஐநூறு, நூறு, ஐம்பது, இருபது, பத்து, ஐந்து, இரண்டு, ஒரு  -- புதிய கரன்சி ரூபாய் நோட்டுக்களைக் பயன்படுத்தியுள்ளனர். யூ.எஸ். டாலர் கரன்சியும் இருந்தது.... நன்றாக படத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். பயன்படுத்திய பணங்களை மீண்டும் பயன்படுத்தலாமல்லவா? (so not an expenditure).

மேற்கு வங்கம் :
இங்கு தான் 'துர்க்கா பூஜா' ரொம்ப பிரபலம் எனக் கேள்வி பட்டிருக்கேன். இந்தப் பகுதிக்கு இது வரை செல்லும் வாய்ப்பு கிடைக்காதலால் அது பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மேலும் விபரங்களுக்கு இந்த லின்க்கினை  கிளிக்கவும்.

மைசூர் தசரா :

மைசூர் அரண்மனை - தசரா - யானைகளின் அணிவகுப்பு.. மன்னர் காலத்து முறை கொண்டாட்டங்கள்..  இதை பற்றியும் எனக்கு அனுபவமில்லை. கொடுக்கப்பட்ட இந்த லிங்க்குகளை பார்த்து மேலும் அறியவும்.

நன்றி..

ஊருல விசேஷங்க


என்னதான் சொல்லுங்க... எந்த ஒருத்தருக்கும், தான் பிறந்த ஊரும், வளர்ந்த ஊரும் ரொம்பப் பிடிக்குமுங்கோ.. அதுல, பிறந்து வளர்ந்தது ஒரே ஊரா இருந்தா.. சொல்லவே வேணாம்.. நம்ம ரஜினி காந்த் 'படையப்பா படத்துல சொல்லுற மாதிரி' ... 'ரொம்ப.. ரொம்ப.. ரொம்பவே' பிடிக்குமுங்கோ..

நா பிறந்து, வளர்ந்து.. படிச்ச (எனக்கு பிடிச்ச) ஊரு மன்னார்குடி. எங்க ஊருக்கே ரொம்ப பெருமை சேக்குற விஷயம், அழகான மதில்கள் சூழ்ந்த பெரிய கோவிலும் (மன்னார்குடி மதிலழகு), அதன் திருவிழாக்களும்.. ஆமாங்க, வருஷம் பூராவும் அதாவது எல்லா தமிழ் மாசத்துலயும், ஏதாவது ஒரு திருவிழா உண்டு, எங்க ஊரு கோவிலுல. இருந்தாலும் பல வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கும் 'கும்பாபிஷேகம்' ஒரு தனி விஷேஷந்தான ?

இது முன்னால 1995 ம் வருஷம் ஜூன் மாசத்துல 'கும்பஷிஷேகம்' ரொம்ப விமரிசையா நடத்தினாங்க.... அந்த நாள் ஞாபகம் இப்ப ரொம்ப வருது.. ஏன்னா.. நாளைக்கு (22 ஆகஸ்டு 2010), அதாவது 15 வருஷத்துக்கு அப்புறம், எங்க ஊரு பெரிய கோவிலுல 'கும்பாபிஷேகம்' நடக்க போகுது. நான் 1200 கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும், என்னோட மனசு மன்னர்குடிலதான் இருக்குது.. ஆமாம் நேர்ல இந்த விசேஷத்துக்கு போக முடியலேன்னு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.. இந்த விழாவில் பங்கு பெரும் அனைத்து மக்களும் என்னைப் பொறுத்தவரை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க தான்.. எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு அவங்க மேல. இருந்தாலும், 'ஸ்ரீ செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ ராஜகோபாலன்' (எங்கள் தெய்வம்) எப்பவுமே எங்களோட இருப்பதாக அணுவளவும் சந்தேகமின்றி சொல்லுவேன்.

மேலும் ஆர்வமிருந்தால் பின்வரும் வலை-நிலையங்களை பார்க்கவும்...
  1. http://www.thehindu.com/arts/history-and-culture/article582320.ece?homepage=true
  2. http://www.divyadesam.com/purana-temples/mannargudi-temple.shtml
  3. http://www.onlytravelguide.com/tamilnadu/spiritual/mannargudi-temple.php
  4. http://www.templenet.com/Tamilnadu/rajamann.html
அட தேவையில்லாம என்னத்தையோ சொல்லிப்புட்டு இருக்கேன்... சிம்பிளா கூகுள்ள 'மன்னார்குடி temple'ன்னு சர்ச் பண்ணத்தெரியாத உங்களுக்கெல்லாம் ?


திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களை, மொழி-இன-மத வேறுபாடின்றி, மகிழ்வோடு வாழ வைப்பதற்கே என நினைத்து வாழும் உள்ளம்,
-- ஸ்ரீ. மாதவன்

எங்கள் மண்ணின் தெய்வத்தின் காலடியில், இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.